'பாரிய கொலை, ஊழலில் ஈடுபட்டவர்கள் நீங்கள்.." : நாமலுக்கு ஹந்துன்நெத்தி பதிலடி


பாரிய கொலைக் குற்றங்களை இழைத்து - ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு நாட்டைப் படுகுழியில் தள்ளிய ராஜபக்சர்களை மக்கள் எவரும் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.


ராஜபக்சர்களையும், கடந்த அரசுகளையும் விமர்சித்துக் கொண்டிருக்காமல் சமூகக் கட்டமைப்பில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுங்கள். என்று அநுர அரசிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நாமல் எம்.பியின் இந்தக் கருத்து தொடர்பில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பதிலளிக்கும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று ராஜபக்சர்கள் கனவு காணக்கூடாது  

ராஜபக்சர்களைச் சிறைக்கு அனுப்புவதால் நாட்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடையாது.

"ராஜபக்சர்களின் கொடூர ஆட்சிக்கு முடிவு கட்டவே நாட்டு மக்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். இறுதியில் ராஜபக்சர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள்.
மூன்றிலிரண்டுப் பெரும்பான்மைப் பலத்துடன் தேசிய மக்கள் சக்தி கட்சியை மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள். மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வருகின்றோம்.

விரைவில் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம். ராஜபக்சர்கள் எமக்கு அறிவுரை கூறத் தேவையில்லை. ராஜபக்சர்களைப் பழிவாங்குவது தேசிய மக்கள் சக்தி அரசின் நோக்கம் அல்ல.

ராஜபக்சர்கள் இழைத்த குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். அதில் நாம் தலையிட மாட்டோம்”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.