'கண்முன்னே கொடூரமாக கொலை செய்தார்கள்.." பட்டலந்த வதை முகாம் தொடர்பில் மனுத்தாக்கல்


 
பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி முன்னிலை சோஷலிஸக் கட்சியின்  நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்  நேற்று மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர்,
 

“பட்டலந்த வதை முகாம் போன்ற பல வதை முகாம்களில் நடந்த கொடூரங்கள் தொடர்பில் இதுவரை ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவித்து வந்த போதும் அதை கவனத்தில் கொள்ளவில்லை.


ஆகையால் இன்று சிஐடியில் மனுவொன்றை கையளித்துள்ளேன். வதை முகாம் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட வேண்டும்.

கண்முன் நடந்தேறிய கொடூரங்களையே தெரிவித்திருந்தேன். பல வருடங்களாக இராணுவ பொலிஸ் பிரிவின் நிரந்தர புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளேன்.

கொழும்பில் இருந்த வதை முகாம்கள் மற்றும் பட்டலந்த வதை முகாமுக்கு கைதுசெய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட நபர்கள், கண்முன்னே சித்திரவதை அளித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டமைத் தொடர்பில் 1996 ஆம் ஆண்டு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்திருந்தேன்.

முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபர் சற்குணராஜா ஆகியோர் சீருடையில் உள்ள நபர் ஒருவர் இவற்றை வெளிப்படுத்துவது குற்றம் என தெரிவித்திருந்தார்.


அன்று பட்டலந்த வதை முகாமில் கொல்லப்பட்டவர்களின் தரப்பினரே தற்போது ஆட்சியில் உள்ளனர். 60 ஆயிரம் உயிர்கள் பறிக்கப்பட்டமைக்கு நீதி வழங்க வேண்டிய காலம் இது.

ஆகையால் உடனடியாக பட்டலந்த விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்” என தெரிவித்தார்.