குடும்ப வறுமை காரணமாக சவுதிக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
முல்லைத்தீவு துணுக்காய், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கலாநாதன் கிருஸ்ணவேணி என்ற பெண்ணே தனக்கு நேர்ந்த கொடுமைகளை ஊடகங்களிடம் விபரித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள் குடியேறிய பின்னர் குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக முகவர் ஒருவர் மூலமாக சட்ட பூர்வமாக சவுதிக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்றேன்.
நான் ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் வீட்டு வேலைக்கு தான் சென்றேன். போகும் போது எனக்கு 49 வயது. ஆரம்ப சம்பளம் அவர்களது பணத்தில் 900 தந்தார்கள். முதல் மாத சம்பளம் இன்னும் தரவில்லை.
பின்னர் எனக்கு மேதிலக சமையல் வேலைகள் தந்தார்கள். தோட்ட வேலை உட்பட பல வேலைகளை அவர்களது தாய் இறந்ததும் செய்தேன். மேலதிக வேலையால் நான் சிரமப்பட்டேன்.
என்னை துன்பப்படுத்தினார்கள். காலில் அடித்தார்கள். இரண்டு வருடத்தில் திரும்பி வருவதாகவே சென்றிருந்தேன்.
எனக்கு இறுதி மாத சம்பளமும் தரவில்லை. நான் உழைக்கச் சென்று தற்போது பணமும் இல்லை. உடலும் இயலாத நிலையில் உள்ளேன். அந்த குடும்பத்தில் விசேட தேவையுடைய ஒரு பிள்ளை உள்ளது. அதுவும் அங்கு துன்பப்படுகிறது. அதனையும் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார்.