இலங்கை விவகாரத்தில் சர்வதேச விசாரணைக்கு எவ்வித அவசியமும் இல்லை என அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை குறித்து பதிலளித்த போதே, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கடந்த அரசாங்கத்தின் கீழ் சர்வதேச விசாரணைக்கான தேவை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அதற்கான தேவை ஏற்படவில்லை. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளோம்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு மனித உரிமை மீறலும் இடம்பெறவில்லை என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக் காட்டினார்.
எனவே, செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத் தொடரில் அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யுத்த காலத்தில் ஏதேனும் மனித உரிமைமீறல்கள் இடம்பெற்றிருந்தால், உள்ளக விசாரணையின் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்புஅமைச்சர் கூறினார்.
அத்துடன், செம்மணி விவகாரத்தையும் தற்போதைய அரசாங்கம் மூடி மறைக்கவில்லை என்றும் செம்மணி மனிதப் புதைகுழி, விடுதலை புலிகளின் கீழும் இராணுவத்தின் கீழும் இருந்துள்ளதாகவும் சுட்டிக் காட்டிய அவர்,
ஆகவே செம்மணியில் கிடைக்கும் மனித என்புக்கூடுகள் எந்த காலத்திற்கு உரியது என்பதை கண்டறிய வேண்டும் என்றும் அதன் பின்னர் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
எனினும், இவற்றுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்