'பஸ் 4ஆவது கியரில் பயணித்துள்ளது... சீரற்று காணப்பட்டுள்ள பிரேக்..." ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பதுளை எல்ல  வெல்லவாய பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு, பேருந்தின் பிரேக் முறையாக பராமரிக்கப்படாமையே காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சுமார் ஆயிரம் அடி பள்ளத்தில் வீழந்து பேருந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்நிலையில், விபத்து தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களித்தின் ஆணையரின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

பேருந்தின் பிரேக் முறையாக பராமரிக்கப்படாமையே காரணம் என குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயரமான பகுதியில் இருந்து கீழ் நோக்கி பயணிக்கும் போது பயன்படுத்த வேண்டிய கியருக்கு பதிலாக, நான்காவது கியரில் பேருந்து பயணித்துள்ளமை விசாரணைகள் தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து நடந்த நேரத்தில் பேருந்தின் பின்புற வலது சக்கர அமைப்பில் பிரேக்குகள் முழுமையாக செயற்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதேநேரம் எல்ல  வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைதான நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில் பண்டாரவளை நீதவான்நீதிமன்றில் முன்னிலைப்படுத்த போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளராக அவர் அதனை உரிய வகையில் பராமரிக்காமை காரணமாகவே நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 4 ஆம் திகதி இரவு, சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த
தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும்அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற
பேருந்து, எல்ல  வெல்லவாய பிரதான வீதியில் 24வது மைல்கல் பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் பேருந்தின் சாரதிஉள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் தங்காலை நகரசபையின்செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன உட்பட 12 ஊழியர்கள் உயிரிழந்தனர்.விபத்தில் காயமடைந்த 17 பேர் பதுளை,
பண்டாரவளை மற்றும் தியத்தலாவைவைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்