ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த சம்பவம் தொடர்பாக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையர் நாயகம் துஷார உப்புல்தெனிய, நேற்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதற்கமைய, அவரை ஜூன் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ், வெசாக் பௌர்ணமி தினத்தில் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து ஒரு கைதியல்ல, மூன்று கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரியவந்தது.
இதேநேரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, சிறைச்சாலை மருத்துவமனையில் சொகுசாக காலம் கழிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 09ஆம் திகதி கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் பேரில் துஷார உபுல்தெனிய விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
அதனையடுத்து, அவர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை நிர்வாகத்தின் கீழ் உள்ள கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
எனினும், அன்றையதினம் இரவே அவர் இரகசியமான முறையில் சிறைச்சாலை மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கு அவருக்கு சொகுசு வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போதைக்கு துஷார உபுல்தெனிய, பகல் நேரங்களில் மெகசின் சிறைச்சாலை அத்தியட்சகராக இருக்கும் தனது சகோதரனின் அலுவலக அறைக்குள் தங்யிருப்பதுடன், இரவு நேரங்களில் மாத்திரம் தூங்குவதற்காக சிறைச்சாலை மருத்துவமனைக்கு திரும்பி வருவதாக கூறப்படுகின்றது.
ஏனைய விளக்கமறியல் கைதிகளுக்கு இல்லாத பல்வேறு சலுகைகள் சிறைச்சாலை அதிகாரிகள் மூலம் துஷார உபுல்தெனியவுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நம்பகமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.