இறுதிப் போரின் போது புதுமாத்தளன் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட வேளையில்,அவரை மீட்க பல்வேறு தரப்பினரால் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும், அவரை மீட்க முடியாது என்ற நிலைமை உருவாகியிருந்த போது, சம்பந்தன், கருணாநிதி,ஜெயலலிதா உட்பட அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் தலைவர்களும் பிரபாகரனை முடித்து விடுமாறு கூறினர் என்றும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நியூஸ் சென்ரர்' என்ற யூடியுப் செய்தி பிரிவுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இறுதிக் கட்ட போர் காலத்தில் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சி விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள், பேர்டினன்ட் மற்றும் இன்றிருக்கும் அண்ணாமலை போன்றோரும் அதில் உள்ளடங்குவர்.
நாங்கள் எதிர்பார்க்காத நிலையில், காங்கிரஸ் கட்சி வெற்றியை பெற்றுவரும் போது, சிவசங்கர் மேனனும், முடித்துக் கொள்ளுங்கள் என எங்களுக்கு கட்டளை வழங்கினார்.
அதற்கு முன் சம்பந்தன் மற்றும் இலங்கையின் தமிழ் தலைவர்கள், கருணாநிதி, ஜெயலலிதா, சர்வதேச, உள்ளூர் தமிழ் தலைவர்கள் அனைவரும் சந்தித்து பேசினர்.
அச்சந்தர்ப் பத்தில், இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளின் தலைவரை சுற்றிவளைத்ததால் அவரை மீட்பதா என கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
மேலும், கனடா உட்பட குமரன் பத்மநாபன் ஊடாக சர்வதேச ஒத்துழைப்பும் மேற்கொள்ளப்பட்டது. அதனுடாக விடுதலைப் புலிகளின் தலைவரை கடல் மார்க்கமாக கொண்டு செல்வதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டது.
அதற்கு அமெரிக்காவின் மெரைன் ஒத்துழைப்பும் பெறப்பட்டது. இறுதியில் சம்பந்தன் உட்பட அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் தலைவர்களும் பிரபாகரனை முடித்து விடுமாறு கூறினர்.
குறிப்பாக ஜெயலலிதாவின் கூற்றில், நான்தான் உலக தமிழ் தலைவர்களின் தலைவி, ஆனால் பிரபாகரன் சர்வதேச தமிழர்களின் தலைவராக நினைக்கிறார். அவருக்கு முடிவு கட்டவும் என்று சொல்லியுள்ளார்.
இந்த சம்பாசனைகள் அனைத்தும் சிவசங்கர் மேனனுடனான இறுதிச் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதாகும்.
பலத்துடன் இருக்கும் போது கொண்டாடுவார்கள். ஆனால் பலம் குறைந்து விட்டால் அனைவரும் சேர்ந்து மிதிப்பார்கள். இதுஉலக நியதி. இன்றிருக்கும் தலைவர்களுக்கும் இவை படிப்பினையாகும்.
ஆனால், இறுதி யுத்தத்தில் அமெரிக்கா,கடற் புலிகளின் வலுவை இல்லாதொழிக்க உதவி செய்வதற்கு காரணம் ஒன்று உள்ளது.
அதாவது யேமனிலுள்ள அமெரிக்க தளத்திற்கு அல்கொய்தா தாக்குதல் நடத்தியது. அதன் தொழில்நுட்பத்திற்கு விடுதலைப்புலிகளே உதவியது நிரூபணமானதால் அமெரிக்கா எங்கள் பக்கம் சார்ந்தது.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட அவுஸ்திரேலியா கடல் பரப்புக்கு சென்று விடுதலைப் புலிகளின் கப்பல்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்றவற்றைமுறியடிக்க அமெரிக்காவும் உதவியது. அவ்வாறு செய்திருக்காவிட்டால் இன்று யுத்தம் முடிவில்லாமல் தொடர்ந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.