'நான் பௌத்த மதத்தை பரப்பவில்லை.." : முல்லைத்தீவில் பெண் விளக்கம்


 


முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவிலான பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தன.

நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாத நபர்களால் குறித்த பதாதைகள் கிழித்தெறியப்பட்டிருந்தன.
அதன் பின்னர் தாம் அமைத்தமைக்கான காரணத்தை குறித்த நபர் ஊடகங்களுக்கு இன்றையதினம் விளக்கமளித்திருந்தார்.

 இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

வித்தியானந்தா கல்லூரிக்கு அருகாமை சிங்களம் கற்பிக்கும் நிலையம் ஒன்றினை நடாத்தி வருகிறேன். பொசன் போயா நிகழ்வினை எவ்வாறு கொண்டாடுவது என மாணவர்களுக்கு விளக்கமளிக்கவே பொசன் போயா நிகழ்வை வரைந்து காட்சிப்படுத்தியிருந்தேன்.

பௌத்த மதம் எவ்வாறு இலங்கைக்கு பரப்பப்பட்டது என்பதையே காட்சிப்படுத்தியிருந்தேன். அதனை சிலர் வந்து உடைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். நான் இது சம்பந்தமாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளேன்.

நான் மதத்தை பரப்புவதற்கோ அல்லது பௌத்த மதம் இங்கே வரவேண்டும் என்பதற்காக செய்யவில்லை. இங்கே கற்கும் பிள்ளைகளுக்கு செயல்முறை வடிவிலே செய்து விளக்கமளிக்கவே இதை செய்தேன். வெளியே தெரியும் வகையிலே காட்சிப்படுத்தினாலே மாணவர்களால் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும்.

மகிந்த தேரரின் வருகையும் இலங்கையில் பௌத்த மதம் ஸ்தாபித்தலும் என்றால் தேவநம்பிய தீசன் காலத்தில் மகிந்ததேரர் பிக்குணி சங்கமித்தை வருகைதந்து எவ்வாறு பௌத்த மதத்தை ஸ்தாபித்தனர் என்பது தொடர்பான படங்களுமே பதாதையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன என்றார்.