'துறைமுகம் ஊடாக வந்த போதைபொருள் .. பின்னணியில் ரத்நாயக்கவா..? விடுக்கப்பட்ட கேள்வி




ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போதைப்பொருள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதுளையில் தெரிவித்திருந்தார். அவ்வாறெனில் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுக அமைச்சு நீக்கப்பட்டமை தான் அந்த நடவடிக்கையா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கேள்வியெழுப்பியுள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர்


கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமைக்கும் நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை மிகவும் ஆழமாக ஆராய வேண்டியது கட்டாயமாகும்.
எவ்வாறிருப்பினும் இலங்கை வரலாற்றில் இதுவரை செய்யப்பட்ட மிகப் பெரிய மோசடிச் செயல் இது என்பதை நாம் மக்களிடம் தெரிவிக்கின்றோம்.
விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் முக்கிய விடயங்கள் பலவற்றை தெரிவித்திருந்தார்.

அதேபோல், இந்தக் கொள்கலன்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவில் முதலில் முறைப்பாடு செய்த டான் பிரியசாத் சில நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். அதேபோல், எமது சட்டத்தரணிகள் சங்கம் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளது.
அந்த முறைப்பாடு தொடர்பாக இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மிகவும் துரதிர்ஷ்டவசமாக, மிக ஆபத்தான மோசடி குறித்து விசாரணை செய்யாத பொலிஸ், அமைச்சர்களுக்கு எதிரான அவதூறுகள் குறித்து நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளது.

323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை குறித்து குற்றப் புலனாய்வு பிரிவிலும் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலும் தொடர்ந்து முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இன்றுவரை அது குறித்து எந்தவொரு நபரிடமிருந்தும் வாக்குமூலம் கூட பெறப்படவில்லை. அது பற்றி மௌனம் காக்கும் பொலிஸார் தொலைக்காட்சியில் கூறப்பட்ட ஒரு விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய முற்படுகிறது.

பொலிஸாருக்கு குற்றங்கள் என்றால் என்ன? தங்கள் கடமை என்ன? என்பது மறந்துவிட்டது. பொலிஸ்மா அதிபரே நீங்கள் இன்னொரு பூஜித் ஜயசுந்தரவாக மாற முயற்சிக்க வேண்டாம். அவர் இறுதியில் சிறையில் அடைக்கப்பட்டார். இன்னொரு பொலிஸ்மா அதிபர் சிறையில் துன்பப்படுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை என்றார்.