'இந்திய மீனவர்களின் கைது தொடரும்' - எச்சரிக்கும் அமைச்சர் சந்திரசேகரன்



எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிவிட்டு, எல்லைதாண்டி கடல்வளங்களை அழிக்கும் அட்டூழியங்கள் தொடர்ந்தால் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதோடு, அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.



கடற்தொழில் அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்


இதேவேளை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 07 ராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்றுமாலை உத்தரவிட்டுள்ளார்.


ராமேஸ்வரம்  துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க வந்த ஏழு மீனவர்கள் நேற்று அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்த நிலையில்  இலங்கை கடல் பகுதியில் வைத்து  கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.



தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை இன்று மதியம் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

 
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை குறித்த மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
 
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 7 மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.