'66 மில்லியன் டொலர் நஷ்டம் : 40 நாடுகளுக்கு இலவச வீசா.." : அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

 
சுற்றுலாத்துறை அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு மேலும் 40 நாடுகளுக்கு இலவச வீசா வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது, இந்த தீர்மானத்தினால் திறைசேரிக்கு 66 மில்லியன் டொலர் வருடாந்த வருமான இழப்பு ஏற்படும். எனினும் சுற்றுலாத்துறை ஊடாக அதனை விட அதிக வருமானத்தை பெற எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,


தற்போது நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையும் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையும் ஏற்பட்டுள்ளது. உலகலாவிய ரீதியில் பல்வேறு சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தர ஆரம்பித்துள்ளனர்.
 
இதனால் சுற்றுலாத்துறை மேம்பட்டுள்ளது. இதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேலும் 40 நாடுகளுக்கு இலவச வீசா வழங்குவதற்கு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
 
அதற்கமைய ஒட்டுமொத்தமாக 47 நாடுகளுக்கு இலவச வீசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
 
இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதால் நாட்டுக்கு நேரடி வருமான இழப்பு ஏற்பட்டது. மேலும் 40 நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டால் எமக்கு 66 மில்லியன் டொலர் வருடாந்த வருமான இழப்பு ஏற்படும்.

எவ்வாறிருப்பினும் இந்த நஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தீர்மானித்தார்.
 
திறைசேரிக்கு இந்த இழப்பு ஏற்பட்டாலும் , சுற்றுலாத்துறையின் ஊடாக மறைமுகமாக இதனை விட அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு வருமானத்தை அதிகரிப்பதற்கான பொறுப்பினை சுற்றுலாத்துறையினரிடம் நாம் ஒப்படைக்கின்றோம். அமைச்சு என்ற ரீதியில் நாம் கொள்கை வகுப்புக்களையும், ஒழுங்குபடுத்தல்களையும் மேற்கொள்வோம்.
அவற்றுக்கு அப்பால் துறையை மேம்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளிடமே காணப்படுகிறது. எனவே இந்த தீர்மானம் இலகுவானதொன்றல்ல என்றார்.