ரணில் பதவி விலகும் வரை போராட்டம் ஓயாது

இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் போது இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள், ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதே எமது இரண்டாவது முக்கிய கோரிக்கையாகும். பொது மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஜனாதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

“இன்று நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஒரு முடிவை எடுத்துள்ளது. ராஜபக்ச ஆட்சியால் ரணில் விக்கிரமசிங்க கொண்டு வரப்பட்டுள்ளார். எனவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஊழல் முறைமைக்கும் எதிராக எமது அமைதியான போராட்டங்கள் தொடரும்” என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.