'புலிகளை நினைவேந்த அனுமதிக்க முடியாது.." : சிங்கள ராவயவால் கொழும்பில் பதற்றம்

 

யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்நிலையில் சிவில் சமூக அமைப்புக்களால்  கொழும்பு - பொரளை மயான சந்தியில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது , சிங்கள ராவய அமைப்பை சேர்ந்த சிலர் அங்கு வந்து நினைவேந்தலை நிறுத்துமாறு ஏற்பாட்டாளர்களுடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

'புலிகளுக்கான நினைவேந்தல் எமக்கு வேண்டாம்' என்ற வசனம் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அங்கு சென்ற சிங்கள ராவய அமைப்பினர் , ஏற்பாடுகளை குழப்புவதற்கும் முயற்சித்தனர்.

இதனால் அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்க முன்னரே அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சிங்கள ராவய அமைப்பினரால் அமைதியற்ற நிலைமை ஏற்பட்ட போது அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நினைவேந்தலை நிறுத்துமாறு ஏற்பாட்டளர்களை அறிவுறுத்தினர்.

எனினும் தாம் எவ்வித குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யவில்லை என்பதால் , நினைவேந்தலை நிறுத்த முடியாதென ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு தரப்பிடம் தெரிவித்ததாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் இவ்வாறான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அங்கு தீபம் ஏற்றப்பட்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டதோடு , முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

 அத்தோடு எதிர்வரும் திங்களன்று (22) நீர்கொழும்பு - பால்தி சந்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு பிரிதொரு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் , எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் அங்கும் நினைவேந்தல் இடம்பெறும் என்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்தி பவனி , முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கடந்த 12ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஊர்திப் பவனியானது, இன்றைய தினம் கிளிநொச்சி பரந்தன் ஊடாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடைந்தது.