ராஜபக்சக்களின் அரசியல் கதை இந்நாட்டில் முடிந்துவிட்டது. அவர்களால் இங்கு மீண்டுமொரு அத்தியாயத்தை ஆரம்பிக்க முடியாது. – என்று அமைச்சர் லால்காந்த தெரிவித்தார்.
மஹிந்த சூறாவளி தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்த அவர்,
” விளக்கேற்றிய பின்னர் அவ்விளக்கின் வெளிச்சம் ஒரு கட்டத்தில் பிரகாசமாக தென்படும். அதாவது விளக்கு அணையப்போகின்றது என்பதே அதன் அர்த்தம். எனவே, அரசியல் ரீதியில் ராஜபக்சக்களின் கதை முடிந்துவிட்டது.
இலங்கையில் இனி அந்த பழைய கலாசாரத்துக்கு இடமில்லை. தற்போது சிறப்பாக இருக்கின்ற அரசியல் கலாசாரத்தைவிட சிறந்த ஒன்று வந்தால் மக்கள் ஆதரிப்பார்கள்.
அரசியல்வாதிகளின் சொத்து விவரம் இதுவரையில் வெளிவராமல்தான் இருந்தது. அவற்றைக்கூட வெளியிடுவதற்கு நாமே நடவடிக்கை எடுத்தோம். அரசியலில் ஈடுபடும் அனைவரும் கள்வர்கள் அல்லர்.
எவரேனும் முறையற்ற விதத்தில் சொத்து திரட்டி இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். சட்டம் தற்போது அனைவருக்கும் சமம் என்ற வகையில் அமுலாகி வருகின்றது.” -எனவும் அமைச்சர் லால்காந்த மேலும் குறிப்பிட்டார்.