'இந்தியாவுக்கு 25 வீத வரியால் அபாய நிலையில் இலங்கை.." : விடுக்கப்பட்ட எச்சரிக்கை


அமெரிக்காவின் தீர்மானத்தின் தற்போதைய நிலைவரத்தின் படி இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு இன்றிலிருந்து 30 சதவீத தீர்வை வரி நடைமுறைக்கு வரும். இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிப்பானது ஏற்றுமதி சந்தையில் இலங்கைக்கு பெரும் சவாலாக அமையும் என பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர்,


அமெரிக்காவுக்கு விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரி நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.  

இலங்கைக்கு போட்டியான நாடுகளுக்கு எம்மை விட குறைவான வரி விதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அது எமக்கு சவாலாக அமையும்.

கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, வியட்நாம், இந்தோனேஷியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளே தற்போது எமக்கு போட்டியாகவுள்ளன. இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது குறிப்பிடத்தக்க போட்டித்தன்மையை எமக்கு ஏற்படுத்தும்.

இலங்கை தனக்கு கிடைக்கப் பெற்றுள்ள வரியை குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதைப் போன்று, இந்தியாவும் இன்னும் வரியைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளது.
வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு எம்மை விட குறைவான வரி கிடைத்துள்ளதால் அந்த சவாலை எதிர்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பால் அடிக்கடி வரி திருத்தம் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அதற்கமைய எதிர்காலத்திலும் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கின்றோம். எவ்வாறிருப்பினும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிடுவது எமக்கு சவாலாகவே இருக்கும் என்றார்.