"காணாமலாக்கப்பட்டோர் எவரும் உயிருடன் இல்லை" - நீதி அமைச்சர் பகிரங்கம்


காணாமலாக்கப்பட்டோர் எவரும் இன்னமும் உயிருடன் இருப்பார்கள் என்பதற்கு சாத்தியம் மிகவும் குறைவு என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதனால் தான் காணாமல் போன குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகையாக இரண்டு லட்சம் ரூபாவை வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

"காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் துயரங்களை உணர்வுகளை நாம் புரிந்து கொள்கிறோம். அவர்களை நாம் மதிக்கின்றோம்.

உறவுகளை தொலைத்த துயரத்தில் அவர்கள் மீண்டும் வருவார்கள் என்ற ஏக்கத்துடன் வாழும் குடும்பங்கள் நீதி கேட்டு அரசுக்கு எதிராக போராடுவதில் நியாயம் இருக்கின்றது.

ஆனால் அவர்களை வைத்து தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தமது சுய லாப அரசியலை மேற்கொள்கின்றார்கள். இது கவலைக்குரிய விடயம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் இன்னமும் உயிரிடம் இருப்பார்கள் என்பதற்கு சாத்தியம் மிகவும் குறைவு இதை அவர்களில் குடும்பத்தினரிடம் கூறினால் அவர்கள் ஏற்க தயாரில்லை. நாம் என்ன செய்வது?

இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு தான் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகையாக இரண்டு லட்சம் வழங்க அரசு தீர்மானித்துள்ளது" என்கிறார்