தமிழ் இனத்தின் மீது சிங்கள ஆட்சியாளர்கள் தொடுக்கும் போராட்ட வடிவத்தாலேயே நாமும் திருப்பி அடிப்போம்!


தமிழ் இனத்தினை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அழித்து வந்த சிங்கள தேசம் இன்று மதத்தினை பயன்படுத்தி அதன் ஊடாக எமது மதஸ்தலங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த விடையத்தினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மை நாட்களாக தமிழர் தாயக பகுதியில் அமைந்துள்ள வழிபாட்டு தலங்களை அழிக்கு நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. நேரடியாக ஈடுபடாவிட்டாலும் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளை கொண்டு அந்த செயற்பாடுகளை நிகழ்த்தி வருகின்றது.

ஆயுத போராட்ட காலத்தில் இவ்வாறான ஆக்கிரமிப்புக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின்னர், முதலில் நில ஆக்கிரமிப்பினை மேற்கொண்டு சிங்கள குடியேற்றத்திட்டத்தினை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். 

அதனையடுத்து, தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்பினை தொல்லியல் ஆராய்ச்சி என்ற பெயரில் மேற்கொண்டனர். இவ்வாறான நிலையிலேயே அந்த பகுதிகளில் இனத்தின் வழிபாட்டு தலங்களை அழித்தொழித்து இனத்தின் உரிமைசார்ந்த விடையங்களில் மிக கேவலமான முறையில் இந்த அரசாங்கம் தலையிட்டு வருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளால் தான் தமிழ்மக்கள் ஆயுதம் ஏந்தி தங்கள் உரிமைக்காக போராட வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தமிழ் இனத்தினை அழித்து வந்த சிங்கள தேசம் இன்று மதத்தினை பயன்படுத்தி அதன் ஊடாக எமது மதஸ்தானங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த விடையத்தினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்த வேண்டும். வெடுக்குநாரி மலையில் சிவன் அழிக்கப்பட்டு,  சிங்கள குடியேற்றங்கள், பௌத்த மத ஸ்தானங்களை நிறுவுகின்றனர்.

பௌத்த மதத்தினை நாங்கள் மதிக்கின்றோம். அதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இன்று சிங்கள ஆட்சியாளர்கள் மதத்தினை பயன்படுத்தி வன்முறையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சிங்கள மக்கள் ஒன்றினை புரிந்துகொள்ள வேண்டும். பௌத்த மதத்தினை தமிழ்மக்கள் பிரதேசங்களில் கொண்டவரும் போது அதற்கு எதிர்க்கின்றார்கள் என்றால் அதற்கான காரணம் உண்மையாக தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்திற்கு பௌத்த மதத்தினை சிங்கள ஆட்சியாளர்கள் பயன்படுத்தியது தான் காரணம் அதுதான் ஏற்றுக்கொள்ளமுடியாததாக காணப்படுகின்றது.

இன்று சிங்கள பேரினவாதத்தின் செயற்பாடுகள் காரணமாக பௌத்த மத்தினை நாங்கள் நிராகரிக்கின்றவர்களாக இருக்கின்றோம். இது தமிழர்களுக்கான பூர்வீக நிலம், தமிழ் மக்களுக்கான சொந்த நிலம், இந்த நிலத்தினை எந்தவகையிலும் ஆக்கிரமிக்க நாங்கள் விடப்போவதில்லை.

தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கருத்தில் பௌத்த மதத்தினை நாடுமுழுக்க பரப்ப வேண்டும் அதனை தமிழ்மக்கள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்.

அவ்வாறனவர்களுக்கு நாங்கள் ஒரு செய்தியினை சொல்கின்றோம். நீங்கள் எந்த வடிவத்தில் தமிழ் இனத்திற்கு எதிராக போராட்டங்களை தொடுக்கின்றீர்களோ அந்த வடிவத்தில் எமது போராட்டமும் மீள உங்கள் மீது திருப்பப்படும் இது கடந்த கால வரலாற்று உண்மை.

இவ்வாறான நிலை தொடருமாக இருந்தால் கடந்த காலத்தில் நாங்கள் நடத்திய ஆயுத போராட்டங்களை விட மிகத்தீவிரமான போராட்டங்கள் நடத்தக்கூடிய சூழல் உருவாகும்.

வடகிழக்கு இணைந்த தாயக பகுதியில் தமிழர்கள் வாழவேண்டும் என்பதை இந்தியா விருப்புகின்றது. எதிர்காலத்தில் இந்தியா தமிழர்களின் நிதந்தர தீர்வு விடையத்தில் தமிழர்களுக்கு அதனை வழங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது.

இந்தியா எங்களுக்கு ஆதாரவாக செயற்படும் என்பதை நம்புகின்றோம். போர் நடைபெற்ற காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகள் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் ஏமாற்றியது. போர் நிறைவடைந்த பின்னர் இலங்கை அரசின் பொய்முகம் சர்வதேச நாடுகளுக்கும் சரி இந்தியாவிற்கும் சரி முழுமையாக தெரிந்திருக்கின்றது.

இலங்கை தொடர்பான விடையத்தில் இந்தியாவின் நலன்சார்ந்த விடையங்களும் இங்கு தங்கி இருக்கின்றது. அந்த நலன் சார்ந்த விடையங்கள் தமிழர்களின் நலன்சார்ந்த விடையங்களுக்கும் தேவையாக இருக்கின்றது.

அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டுமாக இருந்தால் அதில் தமிழர்களின் தேவைகளின் நிறைவேற்றப்படக்கூடிய சூழல் இங்கு இருக்கின்றது அது நடந்தேறியே தீரும் அதற்காக இராஜதந்திர ரீதியில் தொடர்ந்தும் பயணிப்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.