வடக்கு - கிழக்கு இனவாத முரண்பாடுகளுக்கு விதுரவே கதாநாயகன்: சாடுகிறார் சாணக்கியன்

வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்படும் இனவாத முரண்பாடுகளுக்கு விதுர விக்ரமநாயக்கவே கதாநாயகன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(06.12.2023) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு, புத்தசாசனம்,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

''புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் கடும் இனவாதி தமிழர் மரபுரிமைகளை அழிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளார்.

தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்தை பதவி விலக்கியதற்கு பதிலாக ஜனாதிபதி இவரை பதவி விலக்கியிருக்க வேண்டும்.

புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு மிக முக்கியமானது. இருப்பினும் இந்த அமைச்சு பற்றி பேசுவது பயனில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வடக்கு மற்றும் கிழக்கில் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட இவர் புத்தசாசன அமைச்சராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

இவர் கடும் இனவாதி .மலைகளை கண்டால் அவரால் இருக்க முடியாது. அங்கு ஓடிச் செல்வார். வெடுக்குநாறி மலை குருந்தூர் மலைக்கு ஓடி வந்தார். இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்தார். மட்டக்களப்பு மாவட்ட குசலான மலைக்கும் வந்தார்.

ஆனால் நாங்கள் அவரை அங்கு செல்லவிடவில்லை. ஒரு கிலோமீற்றர் தூரம் நடக்க வைத்து வழியனுப்பி வைத்தோம். இனவாத செயற்பாடுகளுக்காகவே புத்தசாசனம் அமைச்சும், தொல்பொருள் திணைக்களமும் பயன்படுத்தப்படுகிறது.

தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளரை ஜனாதிபதி அண்மையில் பதவி விலக்கினார். உண்மையில் இனவாத முரண்பாடுகளின் கதாநாயகனாக உள்ள புத்தசாசன அமைச்சரை அவர் பதவி நீக்கியிருக்க வேண்டும்.

இவரை பதவி நீக்க தைரியம் இல்லாமல் பணிப்பாளர் நாயகத்தை பதவி நீக்கினார். ஜனாதிபதியுடன் பேசி பயனில்லை என்பதற்காக தற்போது சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.

இனவாதியான புத்தசாசன அமைச்சர் நீதிமன்ற கட்டளைக்கு புறம்பாக இராணுவத்துடன் வெடுக்குநாறிக்கு வருகை தந்தார்.

ஆகவே இவருக்கு எதிராக எதிர்காலத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இந்த கடும் இனவாதி அமைச்சரினால் தான் நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

எதிர்காலத்தில் நிச்சயம் இதற்கு பதிலளிக்க வேண்டும்" என்றார்.