ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் காலிஃபா பின் சயீது காலமானார்!

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் காலிஃபா பின் சயீது, தனது 73ஆவது வயதில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.இவரது மறைவு குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டு மக்களுக்கும், இஸ்லாமிய தேசத்திற்கும், உலக மக்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதியின் மறைவுக்காக 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.அமைச்சகங்கள், துறைகள், மத்திய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவரான ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான், கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி முதல் ஜனாதிபதியாக இருந்து வருகிறார்.ஆனால் 2014ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதில் இருந்து அவரது ஒன்றுவிட்ட சகோதரர் முகமது பின் சயீத் அல்-நஹ்யான் இப்போது மாநில விவகாரங்களுக்குப் பொறுப்பாக உள்ளார். அல்-நஹ்யான் குடும்பத்திற்கு 150 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து இருப்பதாக நம்பப்படுகிறது.ஷேக் கலீஃபா ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியாக இருப்பதுடன் ஐக்கிய அரபு அமீரகத்தை உள்ளடக்கிய ஏழு அமீரகங்களின் எண்ணெய் வளமிக்க தலைநகரான அபுதாபியின் ஆட்சியாளராகவும் இருந்தார்.1971ம் ஆண்டு முதல் ஷேக் கலீஃபாவின் தந்தை ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அரபு நாட்டின் முதல் ஜனாதிபதியாக இருந்து வந்தார். இவரது மறைவுக்குப் பிறகு ஷேக் கலீஃபா இரண்டாவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.1948ஆம் ஆண்டில் பிறந்த ஷேக் கலீஃபாவின் ஆட்சியின் கீழ் ஐக்கிய அரபு அமீரகம் ஒரு விரைவான வளர்ச்சியைக் கண்டது. இது மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்தது.