பாடசாலை மதிய உணவில் கிடந்த பாம்பு- ஆபத்தான நிலையில் மாணவன்

பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய மாநிலம் மேற்கு வங்கத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது. அதனை உண்ட மாணவர்கள் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தனர். சுமார் 30 மாணவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் நடந்த சோதனையில் பெரிய பாம்பு ஒன்று மதிய உணவில் கிடந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாடசாலை நிர்வாகத்தினர் மாணவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களில் ஒரு மாணவர் மட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனைய மாணவர்கள் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாணவர்களின் நிலை அறிந்த உறவினர்கள் தலைமை ஆசிரியரின் வாகனத்தை ஆத்திரத்தில் அடித்து நொறுக்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பருப்பு நிரப்பப்பட்ட கொள்கலன் ஒன்றில் பாம்பு காணப்பட்டதாக உணவை தயாரித்த பாடசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.