யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை , அகற்றக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணி ஒருவர, நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேர் பலாலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செல்வராசா கஜேந்திரன் தலைமையில் அவரது கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த விகாரைக்கு சற்று தூரத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
அதன் போது அங்கு வந்திருந்த பலாலி காவல்நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறையினர், இவ்விடத்தில் சட்டவிரோதமான முறையில் கூட முடியாது. அதனால் இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்லுமாறு பணித்துள்ளனர்.
அதனை மீறி அங்கு நின்றவர்களை சட்டவிரோதமான முறையில் கூடி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றனர் எனும் குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர், நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேரை கைது செய்தனர்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தனியார் காணி ஒன்றில் நின்றிருந்த வேளை அவரை வலுக்கட்டாயமாக தூக்கி அக்காணியில் இருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். வலிகாமம் - தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையிலேயே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசார செயலாளரை தொடர்பு கொண்டு வினவிய போது அவரது பதில் இவ்வாறு இருந்தது,
“தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி நேற்றைய தினம் மதியம் மூன்று மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், காவல்துறையினர் புதிய நீதிமன்ற உத்தரவொன்றை காண்பித்து போராட்டக்காரர்களை விலகும் படி தெரிவித்துள்ளனர்.
இதனை மறுத்த போராட்டக்காரர்கள் இன்று (23) காலை மீண்டும் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இதனை தொடர்ந்தே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மகளிர் அமைப்பு அணியின் தலைவி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண் காவல்துறையினர் இன்றி ஆண் காவல்துறையினரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்றார்.