மியன்மாரில் மனித கடத்தலில் சிக்கியுள்ள இலங்கையர்கள் : அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்

மியன்மாரில் மனித கடத்தலில் சிக்கியுள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் மனித கடத்தலில் சிக்கியவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அவர்களது உறவினர்களை தவறாக வழிநடத்தி பணம் வசூலிக்கும் மோசடியும் இடம்பெற்று வருவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனவே இதுதொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மியன்மாரின் சைபர் கிரிமினல் ஏரியா எனப்படும் இணைய குற்றச் செயல்கள் இடம்பெறும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வரும் நிலையில், மற்றுமொரு இலங்கையர் அந்த பகுதிக்குச் சென்று ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்கியுள்ளார்.

முன்னதாக கணினித் துறையில் வேலைவாய்ப்பு தேடிச் சென்று அங்கு சிக்கியுள்ள 56 இலங்கையர்களையும் மீட்பதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த இலங்கையர் குறித்த முகாமிற்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் சகல இலங்கையர்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.