கனடாவில் நடுவீதியில் மனைவியை வெட்டிக்கொன்ற இலங்கைதமிழர் -ஆரம்பமானது விசாரணை


இந்தியாவில் முறைப்படி திருமணம் நடைபெற்று கனடாவிற்கு அழைக்கப்பட்ட தனது மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவரை வெட்டி கொலை செய்த இலங்கைத்தமிழர் மீதான விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி இந்த சம்பவம் நடுவீதியில் இடம்பெற்றுள்ளது.

சசிகரன் தனபாலசிங்கம் என்பவரே பிரிந்து வாழ்ந்து வந்த தனது மனைவியான தர்ஷிகா ஜெகன்நாதன் என்பவரை வாளால் வெட்டி கொலை செய்தார்.

தர்ஷிகா வேலை முடிந்து வீடு திரும்பும் போது அவர் மீது சசிகரன் தாக்குதல் நடத்தியிருக்கிறார். அதன்படி குறித்த பகுதியில் ஆண் ஒருவர் வாளுடன் பெண் ஒருவரைத் துரத்துவதாக கிடைத்த பல்வேறு முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்த போது, குறித்த அந்தப் பெண் பலமுறை கத்தியால் வெட்டப்பட்டு படுபயங்கரமான காயங்களுடன் கிடந்த நிலையில் பின்னர் உயிரிழந்தார், இதையடுத்து சசிகரன் காவல்துறையில் சரணடைந்தார். 

ஒன்றாறியோ நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை இது தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பமானது. சசிகரன் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதியப்பட்டது. சசிகரனுக்கும், தர்ஷிகாவுக்கும் நடந்தது நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும், அவர்களின் திருமணம் இந்தியாவில் நவம்பர் 1ஆம் திகதி 2015ல் நடந்தது.

கடந்த 2017ல் தர்ஷிகா தனது கணவருடன் சேர்ந்து வாழ கனடாவுக்கு வந்தார். ஆனால் சில வாரங்களில் வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார். இதன்பிறகு தான் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி சசிகரனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.