ஐ.நாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உணர்வை புறம் தள்ளிய இலங்கை- கடும் கண்டனம்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது.

அதன் போது, அங்கு உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கருத்துத் தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் தமக்கு சர்வதேச விசாரணையே தேவை எனவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். 

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் றஞ்சனா ஆகியோர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில், அங்கு இலங்கை தொடர்பான விடயத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையை தொடர்ச்சியாக கோரிவரும் எமக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எந்த விடயமும் முன்வைக்கப்படாமையானது கவலையளிக்கிறது. 

இதேவேளை இந்த கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணை தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்துக்கிறோம். 

இதேவேளை பாதிக்கப்பட்ட தரப்புக்களாக நாம் இன்று 13 ஆண்டுகளாக போராடி எந்த தீர்வும் இல்லாது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆரம்பித்த தொடர்ச்சியான போராட்டம் இன்று 2015 ஆவது நாளாக தொடர்கிறது.

இவ்வாறான நிலையில், சுயாதீன உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்த தேவையான ஆதரவு மற்றும் வளங்களை  அரசாங்கம் பெற்றுக்கொடுக்குமென  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்றைய முதல் நாள் அமர்வில் தெரிவித்திருந்தார்.

மேலும் புலம்பெயர் மக்களுக்கான அலுவலகத்தை இலங்கையில் நிறுவுவதன் மூலம் அவர்களுடன் இருக்கும் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சரும், அதிபர் சட்டத்தரணியுமான அலி சப்ரியின் கருத்தானது எமது உணர்வுகளை புறந்தள்ளி அரசை பாதுகாப்பதாக அமைந்துள்ளதாகத் தெரிவித்ததோடு, அவரின் கருத்துக்கு கடும் கண்டணத்தையும் வெளியிட்டுள்ளனர்.