இந்தியாவின் கழுகுப் பார்வைக்குள் இலங்கை

சீனாவின் உதவியுடன் இலங்கையில் ராடர் தளத்தை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படும் நிலையில், இது தொடர்பில் இந்தியா தனது உச்சக்கட்ட கண்காணிப்பை செலுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியான்மாரின் கொக்கோ தீவுகளில் இராணுவ தளம் ஒன்று உருவாக்கப்படுவதும், இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள தொலைதூர செயற்கைக்கோள் தரவுகளைப் பெறும் நிலையமும் பிராந்தியத்தில் சீனாவின் கண்காணிப்பு நடவடிக்கைகள் இந்தியாவுக்கு கரிசனையை ஏற்படுத்தி உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் உள்ள கொக்கோ தீவுகளில் இராணுவ தளம் ஒன்று உருவாக்கப்படுவதை சமீபத்திய செய்மதி படங்கள் காண்பித்துள்ளன.

இலங்கையில் தொலைதூர செயற்கைக்கோள் தரவுகளை பெறும் நிலையம் ஒன்றை உருவாக்கும் யோசனையை சீனா முன்வைத்துள்ளதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீனா இந்த ராடர் தளத்தை பயன்படுத்தி இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புபட்ட வளங்களை வேவு பார்க்கலாம் எனவும், பிராந்தியத்தில் தகவல்களை இடைமறித்து கேட்கலாம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.