இனப்படுகொலையாளியே வெளியேறு - சவேந்திர சில்வாவின் யாழ் வருகைக்கு எதிராக பாரிய போராட்டம்!

முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியால் நாவற்குழி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாவற்குழி பகுதியிலுள்ள விகாரையில் இடம்பெறவுள்ள மத நிகழ்வில் சவேந்திர சில்வா மற்றும் 128 பௌத்த பிக்குகள் பங்கேற்கவுள்ள நிலையிலேயே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது, தமிழர் தேசத்தில் பௌத்த விகாரை எதற்கு? இனப்படுகொலையாளி சவேந்திர சில்வாவே வெளியேறு, நிறுத்த நிறுத்து பௌத்த மயமாக்கலை நிறுத்து, வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு, நாற்குழி  விகாரை சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பின் அடையாளம், திட்டமிட்ட  பௌத்த மயமாக்கலை நிறுத்து, நாவற்குழி தமிழர் தேசம், தமிழர் தேசத்தில் புத்த கோயில் எதற்கு,  ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய  வண்ணம் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பேராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய  செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகர் உட்பட பலர் கொண்டிருந்தனர்.

இவ்வாறு முன்னணியினரின் பேராட்டம் போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போதும், அந்த போராட்டத்தை ஊடறுத்து பிக்குகளுக்கும் சவேந்திர சில்வாவுக்கும் மேள தாள முழக்கங்களுடன் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு நூற்றுக் கணக்கான பௌத்த பிக்குகளுடன் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவும் இன்று வருகைதந்துள்ளார்.

நாவற்குழி விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் பிரித் ஓதி வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றவுள்ளது. இந்த வழிபாட்டை நடத்துவதற்காகவே தென்னிலங்கையில் இருந்து நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளனர்.

அதற்கமைய இன்று காலை முதல், பிரித் ஓதுதல் மற்றும் விசேட பூசை ஏற்பாடுகள் என மிகப் பெரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தென்னிலங்கையில் இருந்து வருகை தந்துள்ள சவேந்திர சில்வாவிற்கும் 128 பௌத்த பிக்குகளுக்கும் முப்படையினரின் மரியதை மற்றும் மேள தாளம், ஆலவட்டம் போன்ற வரவேற்பளித்து போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடத்திலிருந்து விகாரை வரை அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

நாவற்குழி சமீத்தி சுமன விகாரையின் கலச திரை நீக்கம் இன்றைய தினம் முப்படைகளின் பிரானதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பங்குபற்றுதலுடன் பௌத்த ஆகம முறைப்படி சம்பிரதாய பூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இதன் பொழுது சிங்கள மக்கள் பௌத்த துறவிகள் இராணுவ அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்த நிலையில் விசேட பௌத்த நிகழ்வுகளும் இடம்பெற்றன.