இலங்கைக்கு அடுத்த அதிர்ச்சி -இலங்கையில் தனது அனைத்து திட்டங்களையும் நிறுத்துகிறது ஜப்பான்

தம்மிடமிருந்து பெற்ற கடன்தொகையை இலங்கை செலுத்த தவறியதன் காரணமாக, இலங்கையில் தனது அனைத்து திட்டங்களையும் ஜப்பான் இடைநிறுத்தியுள்ளதாக அதிர்ச்சிகர தகவலொன்று வெளியாகி உள்ளது.

இந்த தகவலை இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் தரவின்படி. 2021 டிசம்பர் இறுதியில் இலங்கை நிலுவையில் உள்ள ஜப்பான் கடன் தொகை 621 பில்லியன் ரூபாவாகும்.

மேலும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 திட்டத்திற்கான ஒப்பந்ததாரரான ஜப்பானை தளமாகக் கொண்ட தாய்சேய்(Taisei) கூட்டுத்தாபனம் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெர்மினல் 2 திட்டத்தின் நான்கில் ஒரு பங்கே முடிவடைந்துள்ள நிலையில் ஒப்பந்தக்காரரை வெளியேறாமல் வைத்திருக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றபோதும் அந்த கூட்டுத்தாபனத்தினர் நாட்டில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பிரதிநிதிகளை தமது சம்மேளனம் சந்தித்தபோது ​​சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் இல்லாமல் கணிசமான அளவு உதவிகளை தாம் வழங்க முடியாது என்று அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை நீடித்த பொருளாதாரத்திற்கான திட்டத்தை வகுக்கும் வரையில் தாம் இலங்கைக்கு உதவப்போவதில்லை என உலக வங்கி அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.