குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் மர்ம மரணம் - தீவிர விசாரணையில் காவல்துறை!

வவுனியா குட்செட் அம்மா பகவான் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இரண்டு குழுந்தைகள் தாய் மற்றும் தந்தையே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். தந்தை, இரு பிள்ளைகள் மற்றும் மனைவியை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இன்றையதினம் வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். எனினும் அவர் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது குறித்த வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது இருபிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது 42, வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது 36, இருபிள்ளைகளான கௌ. மைத்ரா வயது9 ,கௌ.கேசரா வயது3 ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவம் வவுனியாவில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.