கத்தாரில் கேள்விக்குறியாகும் இலங்கை இந்திய தொழிலாளர்களின் நிலை..!



கத்தாரில் 2022 க்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரானது மிக பிரம்மாண்டமான திருவிழாவாக நடந்து முடிந்துள்ளது.

உலகக் கோப்பை இறுதிப்போட்டியை உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்து சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், இத்தனை பெரிய பிரம்மாண்டத்தை கத்தார் அரசு தன்னுடையை சொந்த பலத்தால் மட்டுமே சாத்தியப்படுத்தவில்லை.

மைதானத்தை கட்டுவது தொடங்கி உலகக் கோப்பை தொடரின் பெரும்பாலான வேலைகளில் கத்தார் அரசு புலம்பெயர் தொழிலாளர்களை வைத்தே சாத்தியப்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 29 லட்சம் வெளிநாட்டு வேலையாட்களின் துணையுடன் தான் இந்த உலகக் கோப்பையை கத்தார் இத்தனை பிரம்மாண்டத்துடன் நடத்தி காட்டியுள்ளது.

இந்த உலகக் கோப்பை பணியில் ஈடுபட்டு சுமார் 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஊடகக் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், பெரும்பாலான தொழிலாளர்கள் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன.

குறிப்பாக Human rights watch அமைப்பைச் சேர்ந்த மிங்கி வார்டன் இந்த உலகக் கோப்பை போட்டி குறித்து கூறுகையில், கத்தார் உலகக் கோப்பை பல தவறான காரணங்களுக்காக நினைவு கொள்ள வேண்டும்.

மிக ஆடம்பரமான உலகக் கோப்பை, பல உயிர்பலிகளை வாங்கிய உலகக் கோப்பை என்றுள்ளார். இந்நிலையில், உலகக் கோப்பை முடிந்த நிலையில் புலம் பெயர் தொழிலாளர்களின் நிலை அடுத்த என்ன என்ற கேள்விக்குறி முன் நிற்கிறது.

இந்த உலகக் கோப்பை நடைபெறுவதை சாத்தியமாக்கிய புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கி அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கத்தார் அரசுக்கு சர்வதேச நாடுகளும் சமூகங்களும் தொடர் அழுத்தம் தந்து வருகின்றன.