மனோ கணேசனின் கோரிக்கையை ஏற்க முடியாது - தமிழ் புலம்பெயர் அமைப்பு...!


சிங்கள பெரும்பான்மையினருடன் தமிழர்கள் இணைந்து வாழ வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

றித்த கோரிக்கையினை நிராகரிப்பதாக நியூயோர்க்கை தலைமையகமாக கொண்டு இயங்கும் தமிழ் புலம்பெயர் அமைப்பு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றினை வெளியிட்டு குறித்த விடயத்தை அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் புலம்பெயர் அமைப்பின் அறிக்கையில்,

"75 ஆண்டுகாலமாக இலங்கையில் இனப்படுகொலைகள் மற்றும் இன அழிப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.

இலங்கையில் வாழும் தமிழர்களின் அவலத்தை ஹோலோகாஸ்டின் போது யூதர்கள் திட்டமிட்ட வகையில் கொல்லப்பட்டமைக்கு ஒப்பிடமுடியும்.

இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்டு சிங்கள பௌத்த விகாரைகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்ற நிலையில் இந்த விடயம் சாத்தியமற்றது.

சிங்கள இனவாதம், ஆக்கிரமிப்பு, அடக்குமுறை மற்றும் பிற மதங்கள் மற்றும் மொழிகள் மீதான வெறுப்பு ஆகியவற்றால், இலங்கை மற்றும் தமிழ் இறையாண்மை கொண்ட தேசம் பிளவுபட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் சாத்தியமற்றது." என தமிழ் புலம்பெயர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் ஒன்றுபட்ட, பிரிக்கப்படாத நாட்டில் வாழும் நோக்கத்துடன் தமிழர்கள் ஒரு நாடாளுமன்ற அரங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என மனோ கணேசன் வலியுறுத்தியதையடுத்தே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.