ரணில் தவறு செய்யமாட்டார் என நம்புகின்றேன் என்கிறார் மஹிந்த



நாட்டில் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடாத்தப்பட வேண்டும் எனவும் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள ராஜபக்சாக்கள் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலைப் பிற்போடும் ஐக்கிய தேசியக் கட்சியின் யோசனைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குமா?' என ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

எந்தத் தேர்தலுக்கும் ராஜபக்சக்கள் பயப்படுபவர்கள் அல்லர். நான் ஜனாதிபதியாக இருந்த வேளை தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தினேன்.
 தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் உரிய காலத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும். அவர் தவறு இழைக்கமாட்டார் என்று நம்புகின்றேன்.

அதேவேளை தேர்தல்களைப் பிற்போட நாம் அனுமதிக்கமாட்டோம். குறிப்பாக பிரதான தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தியே தீர வேண்டும்.

எமது நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை. ஜனாதிபதியிடம் இதனைத் தெரிவித்துள்ளோம்.

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடந்தே ஆக வேண்டும். மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் வெளிப்படுவார் எனவும் தெரிவித்தார்.