பறிபோகும் தாய் நிலம் - துணைபோகும் பிரதேச செயலாளர்

வவுனியா - பூவரசன் குளம், வேலன்குளம், கோவில்மோட்டை கிராமத்தின் பொதுமக்கள் விவசாய செய்கை காணியில் 25 ஏக்கரை நாவலப்பிட்டியிலுள்ள பெரும்பான்மை இனத்தவருக்கு பண்ணை செய்கை மேற்கொள்வதற்கு பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன், குறித்த காணியை தமக்கு விவசாய செய்கை மேற்கொள்ள பெற்றுத்தருமாறும், எமது பகுதியில் வசிப்பவர்களின் காணிகளை எவ்வாறு நாவலப்பிட்டியிலுள்ள பெரும்பான்மை இனத்தவருக்கு பண்ணைச் செய்கை என்ற போர்வையில் நீண்டகால குத்தகைக்கு வழங்க முடியும் என்றும் கேள்வியெழுப்பிய மக்கள் தமது காணியை மீட்டுத்தருமாறும் கோருகின்றனர்.

வவுனியா, வேலன்குளம், கோவில் மோட்டை பகுதியில் வசித்துவரும் மக்கள் கடந்த1969ஆம் ஆண்டிலிருந்து பூர்வீகமாக அங்கு வசித்து வருகின்றனர். அதற்கான காணி ஆவணப்பத்திரம் என்பன வைத்திருக்கின்றனர்.

சிலரின் ஆவணங்கள் யுத்த நடவடிக்கையினால் இடம்பெயர்வின் போது தவறவிடப்பட்டுள்ளது. எனினும் தற்போது அப்பகுதி காடு வளர்ந்து காணப்படுகின்றது. காணியில் துப்பரவுப்பணிகளை மேற்கொள்ள வசதியற்ற நிலையில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திய பிரதேச செயலாளர் அக்காணியை நாவலபிட்டியில் வசித்துவரும் பெரும்பான்மை இனத்தவருக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதை அறிந்த அப்பகுதி மக்கள் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பினை தெரிவிப்பதுடன், தமது காணிக்கான ஆவணங்களையும் தம்வசம் வைத்திருக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது விவசாய நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கைகளை பெற்றுக்கொடுக்காமல் இயற்கை உணவு உற்பத்தி என்ற போர்வையில் பெரும்பான்மை இனத்தவருக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இவ்விடயம் குறித்து கிராம அபிவிருத்திச்சங்கம், அங்குள்ள அமைப்புக்களுடன் கிராம அலுவலகர், பிரதேச செயலாளர் கலந்துரையாடல் மேற்கொள்ளாமல் பிரதேச செயலாளரின் தன்னிச்சையான இந்நடவடிக்கைக்கு தமது எதிர்ப்பினை தெரிவிப்பதாகவும் தமது காணியை தமக்கு மீட்டுத்தருமாறு மேலும் தெரிவிக்கின்றனர்.