வட்டுக்கோட்டையில் பதற்ற சூழ்நிலை: காவல் நிலையத்திற்கு முன் குவிக்கப்பட்ட அதிரடிப் படையினர்

வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் தாக்குதலுக்கு உள்ளாகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழக்க முன்னர் வழங்கிய மரண வாக்குமூலத்தில் காவல்துறையினர் செய்த பல சித்திரவதைகள் அம்பலமாகின.

இந்நிலையில் காவல் நிலையத்தின் பாதுகாப்பு கருதி சுன்னாகம், மானிப்பாய், இளவாலை, யாழ்ப்பாணம் ஆகிய காவல் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப் படையினரும் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் வட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

உயிரிழந்த இளைஞனுக்கு நீதி வழங்காமல் கண்துடைப்பாக சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும் வெறுமனே இடமாற்றம் வழங்கிவிட்டு காவல்துறையினர் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.