தையிட்டி விகாரைக்கு ஆதரவு - விகாரையில் ஒன்று திரண்ட தமிழர்கள்


யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு ஆதரவு தெரிவித்து ''அனைத்து மதங்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும்'' என்ற தொனிப்பொருளில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியானது யாழ். சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் தையிட்டி சந்தியிலிருந்து விகாரை வரை இன்று (13.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பூஜை வழிபாடுகள் இடம்பெற்று மக்களுக்கு தானம் (மதிய உணவு) வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது 200க்கும் மேற்பட்ட மக்கள் விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பதாதைகளைத் தாங்கியவாறு பேரணியாக சென்றுள்ளனர்.

யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட பேரணி பேரணியில் யாழ். சிவில் சமூக செயற்பாட்டாளர் அருண் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் அனைவரும் அனைத்து மதங்களையும் மதிக்கின்ற மத வழிபாடுகளை மேற்கொள்ளும் சுதந்திரம் உண்டு என்றும், தையிட்டி விகாரை யாழ்ப்பாண மாவட்ட வரைபடத்தில் 1959 ஆம் ஆண்டு விகாரைக்குரிய பகுதி என குறிக்கப்பட்டுள்ள நிலமாகும்.

இனவாதம் மற்றும் மதவாதத்தினை எவரும் தூண்ட முயற்சிக்க வேண்டாம்

பொதுமக்களின் காணிகள் அல்ல விகாரை அழிவடைந்த காலத்தில் பொதுமக்கள் அக்காணியை கையகப்படுத்தி தமது குடியிருப்பினை மேற்கொண்டிருந்தனர் ஆனால் அது விகாரைக்குரிய நிலமாகவே காணப்படுகிறது.

பொதுமக்களின் காணியில் விகாரை அமைக்கப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தினை நாட முடியும்.

ஒவ்வொரு மதத்தையும் இனத்தையும் கூறி இனவாதம் மற்றும் மதவாதத்தினை எவரும் தூண்ட முயற்சிக்க வேண்டாம் என வழியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.