யாழில் தொடரும் காவல்துறையினரின் அராஜகம்: பெண்ணின் கழுத்தை நெரித்து தாக்குதல்

யாழ் (Jaffna), குடத்தனை பகுதியில் கசிப்பு உற்பத்தி விற்பனை செய்தார்கள் என்ற சந்தேகத்தில் காவல்துறையினரால் மூவர் கைது செய்யப்பட்டதுடன் பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் நேற்று (07) இடம்பெற்றுள்ளது,

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காவல்துறையினர் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம் பெறுவதாக பல வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர்.

இந்நடவடிக்கையின் போது கு.சிந்துஜா என்பவரது வீடும் சோதனையிடப்பட்டுள்ள போது அங்கு கசிப்போ அல்லது வேறு எந்த பொருட்களும் அங்கு இருக்கவில்லை.

இதன்போது காவல்துறையினர் ஆய்வுகளை நடாத்திக் கொண்டிருந்த போது குறித்த பெண் தனது தொலைபேசியால் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனை அவதானித்த காவல்துறை உறுப்பினர் ஒருவர் அந்த பெண்மணியிடமிருந்து தொலைபேசியை பறித்ததுடன் அவரின் கழுத்தை நெரித்தும் காலால் குத்தியும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தாக்குதலிற்க்குள்ளான பெண்ணிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள  நிலையில் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

மேலும், கைது செய்யப்பட்ட மூவரும் மருதங்கேணி காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.