நெடுந்தீவு படுகொலைப் பின்னணி - காவல்துறையினருக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு ஆதாரம்!


நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை இரண்டு நாள்கள் காவல்துறை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று நேற்று அனுமதியளித்தது. அதனடிப்படையில் சந்தேக நபர் இன்று அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரமும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவு தலைமை காவல்துறை அதிகாரி மேனன் தலைமையிலான உதவி காவல்துறை அத்தியட்சகர் பிரதீப் என்பவரின் நெறிப்படுத்தலில் மீட்கப்பட்டுள்ளன. 

நெடுந்தீவு மாவிலி இறங்கு துறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து கடந்த சனிக்கிழமை காலையில், வெட்டுக்காயங்களுடன் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

அதேவேளை, 100 வயது மூதாட்டி படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை ஆரம்பிக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் மஞ்சுள செனரத்தின் கட்டளையிட்டதற்கமைய பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான காவல்துறை குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதற்கமைய நெடுந்தீவில் தங்கியிருந்த நபர் ஒருவர் கொலை இடம்பெற்ற தினத்தன்று காலை அங்கிருந்து வெளியேறிச் சென்றதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,  குறித்த நபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், புங்குடுதீவில் வைத்து நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் கைது செய்தனர்.

அதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது. 51 வயது நபரே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 26 பவுண் தங்கநகைகள் கைப்பற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.