ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் பலி-புதிய தலைவர் நியமனம்!

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு அல்-ஹஸன் கொல்லப்பட்டதாக, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒமர் அல்-முஹாஜர் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவின் போது, ‘கடவுளின் எதிரிகள்’ என்று அழைக்கப்படுபவர்களுடன் சண்டையிடும் போது கொல்லப்பட்டதாகக் கூறினார். ஆனால் அவர் மேலதிக விபரங்களைத் தெரிவிக்கவில்லை.

ஒக்டோபர் நடுப்பகுதியில் தென்மேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர் சுதந்திர சிரிய இராணுவத்தின் நடவடிக்கையில் அபு அல்-ஹஸன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.கடந்த பெப்ரவரி மாதத்தில் வடமேற்கு சிரியாவில் அமெரிக்க படைகள் மேற்கொண்ட தாக்குதலின்போது, ஐ.எஸ். அமைப்பின் அப்போதைய தலைவர் அபு இப்ராஹிம் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அபு அல்-ஹஸன் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார்.இப்போது அவரும் கொல்லப்பட்டது அந்த அமைப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருடைய கொலைக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை.

அபு அல்-ஹாசனைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டது, அவர் தலைவராக தனது பெயரில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.இந்தநிலையில், அமைப்பின் அடுத்த தலைவராக அபு அல்-ஹூசைன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, செய்தித் தொடர்பாளர் அபு ஒமர் அல்-முஹாஜர் தெரிவித்தார்.

முந்தைய அறிவிப்பைப் போலவே, செய்தித் தொடர்பாளர் தனது உண்மையான பெயர், தேசியம் அல்லது பின்னணியை வெளியிடுவதைத் தவிர்த்தார்.மேலும், அபு அல்-ஹூசைனை மூத்த முஜாஹிதின்களில் ஒருவர் என விபரித்த அவர், குழுவின் ஆதரவாளர்கள் அவருக்கு விசுவாசமாக இருக்குமாறு வலியுறுத்தினார்.