தொடரும் பதற்றம்: இஸ்ரேலின் இரண்டு விமான தளங்களை தாக்கிய ஈரான் ஏவுகணைகள்!


இஸ்ரேலின் இரண்டு விமான தளங்களை ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்கிய நிலையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த மூன்று முக்கிய அதிகாரிகள் மரணமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என சூளுரைத்ததையடுத்து இரண்டு வாரங்களாக அந்த பகுதியில் பதற்ற நிலை நீடித்தது. 

இந்நிலையில், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை(13) ஈரான் நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர ரக பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30 இற்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150 இற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டும் இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதலை மேற்கொண்டது.

இந்நிலையில், இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்கு கப்பலை ஈரான் படையினர் சிறை பிடித்துள்ளதோடு இஸ்ரேலின் இரண்டு விமான தளங்களை ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளன.

இஸ்ரேல் நாட்டின் நெவாதிம் விமான தளத்தின் மீது ஐந்து பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் தாக்கியதில் சி-130 என்ற இராணுவ போக்குவரத்து விமானமொன்று ஓடுபாதை மற்றும் கிடங்குகள் ஆகியவை தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று இஸ்ரேலில் நெகவ் பாலைவன பகுதியில் உள்ள விமான தளத்தின் மீது நான்கு ஏவுகணைகள் தாக்குதல் நடத்திய நிலையில் இதில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையென சரவதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் மீது ஏழு ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் ஏவப்பட்டதோடு அவை இடைமறித்து அழிக்கப்படவில்லையென ஈரான் தெரிவித்துள்ளது.

எனினும் 79 ஆளில்லா விமானங்கள் மற்றும் மூன்று ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் ஆகியவற்றை அமெரிக்க இராணுவம் தாக்கி அழித்ததுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பதிலடியை இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரியும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.