இந்திய ரசிகர்களுக்கு விராட் கோலி கொடுத்த அதிர்ச்சி!

இந்திய அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, சிறிது காலம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற அனுமதி கோரியுள்ள விடயம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நிறைவடைந்தவுடன், இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் டி20 தொடர் நடைபெற்று வருகின்றது.

இந்த தொடரில் உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற பெரும்பாலான வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சூர்யகுமார் தலைமையில் இளம் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 10 ஆம் திகதி முதல் தென்னாப்பிரிக்கா அணியுடன் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்த நிலையில், டிசம்பர் 10 முதல் 21 வரை நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து பிசிசிஐயிடம் விராட் கோலி ஓய்வு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், டிசம்பர் 26 ஆம் திகதி தொடங்கும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி அணியில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கிண்ண தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்து தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றது குறிப்பிடத்தக்கது.