மலையகம் செல்லாத இந்திய நிதியமைச்சர்: தொண்டமான்களுக்கு சவால் விடும் எம்.பி

மலையக மக்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு சென்றார் ஆனால் மலையகத்துக்கு மட்டும் செல்லவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

”நாம் 200 நிகழ்வில் சிறப்பு அதிதியாக இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக் கொண்டார்.

அவர் கொழும்புக்கு வருகை தந்தார்,  கிழக்கு மற்றும் வடக்குக்கு சென்றார். ஆனால் மலையகத்துக்கு செல்லவில்லை. ஆனால் மலையக மக்களை கௌரவிக்கும் நாம் 200 ஆண்டு நிகழ்வில் கலந்துக் கொண்டார்.

மலையக மக்களுக்கும், இந்திய தேசத்தின் தமிழகத்துக்கும் இடையில் தொப்புள் கொடி உறவு காணப்படுகிறது.

மலையக 200 நிகழ்வு தொடர்பில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துச் செய்தி நாம் 200 நிகழ்வில் ஒளிப்பரப்பப்படவில்லை. ஆகவே மலையக மக்களை கௌரவிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் நாடகம் மற்றும் அரசியல் கூத்தை அரங்கேற்றியுள்ளது.

2017 ஆம் ஆண்டு உறுதியளிக்கப்பட்ட 10 ஆயிரம் வீட்டுத் திட்டங்களை இந்திய நிதியமைச்சர் மீண்டும் நினைவுப்படுத்திச் சென்றுள்ளார். மறுபுறம் 2000 ஆம் ஆண்டு முதல் பேசப்படும் 10 பேச்சர்ஸ் காணியை ரணில் விக்ரமசிங்க மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளார்.

இந்த நாடாளுமன்றத்தை மூன்று தொண்டமான்கள் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்கள். இவர்களால் கடந்த 40 வருடகாலம் செய்ய முடியாததை நான் 2015 - 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் செய்து முடித்துள்ளேன்.

கண்டி மாவட்டத்தில் மலையக தோட்ட அபிவிருத்திக்கு சொந்தமான லிட்டில்வெளி தோட்டத்தில் உள்ள சகல லயன் அறைகளையும் ஒதுக்கி 110 குடும்பங்களுக்கு 10 பேச்சரஸ் காணியை ஒதுக்கி அதற்கான உறுதிபத்திரத்தை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.

தொண்டமான் பரம்பரையில் உள்ளவர்களில் எவருக்காவது இதனை சாதிக்க முடியுமா, தோட்ட லயன் அறைகளை ஒதுக்கி காணி உறுதிப்பத்திரத்துடன் காணிகளை வழங்க முடியுமா என்று தொண்டமான்களுக்கு சவால் விடுக்கிறேன்.

தமது சுயநல அரசியல் தேவைகளுக்காக நாம் 200 என்ற நிகழ்வை நடத்தி மலையக மக்களை தரகுறைவாக நடத்தியதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.