''நான் சிங்களவன் தான்! ஆனாலும் விகாரைகள் தேவையில்லை''- யாழில் தேரர் விடாபிடி



வடக்கில் பௌத்தர்கள் குறைவாகவே உள்ள நிலையில் புதிதாக விகாரைகள் தேவையில்லை என யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பௌத்த விகாரைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இராணுவம் இராணுவத்தின் வேலைகளை செய்ய வேண்டும். மதகுருமார்கள் ஆலயம் தொடர்பான வேலைகளை செய்ய வேண்டும்.

எனினும் மாறி மாறி வேலைகளை செய்யக்கூடாது. பழமையான கோயில்கள் இருந்தால் பரவாயில்லை.

புதிது புதிதாக நிர்மாணிக்கப்படும் வழிபாட்டிடங்களேயே நான் கூறுகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நெடுந்தீவு, மாதகலில் இவ்வாறு விகாரைகளை அமைக்க வந்த போதும் நான் அதற்கு இடமளிக்கவில்லை.

நான் எப்போதும் மக்கள் பக்கத்தையும் சரியான பக்கத்தையுமே எடுப்பேன். நான் சிங்களவன் தான். இருந்தாலும் நேர்மை இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.