அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ள கூகுள் : ஜெமினி செயற்கை நுண்ணறிவு அமைப்பு அறிமுகம்

கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு அமைப்பான ஜெமினியை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அண்மையில் அறிவித்திருந்தார்.

தொழில்நுட்ப உலகில் மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் இந்த ஜெமினி அமைப்பானது இந்த வருட இறுதிக்குள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும்  அவர் கூறினார்.

இது இதுவரை உருவாக்கப்பட்டிருக்கும் மொழி அமைப்புக்களை விட பெரியது என்று அவர் குறிப்பிட்டார், தவிரவும் இதில் ஏராளமான மொழிகள் உள்ளடக்கப்பட்டிருப்பது மாத்திரமல்லாமல் இதனை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்த முடியம் எனவும் அவர் கூறினார்.

மின்னஞ்சல் வரைவுகள், இசை வரிகள் செய்திகள் இவை போல மேலும் பல விடயங்களை பயனர்கள் விரும்பும் மொழியில் அதற்கேற்ற அமைப்பில் இந்த ஜெமினி அமைத்து தரும் என ஜெமினி தொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கூகுளின் இந்த ஜெமினி செயற்கை நுண்ணறிவு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டால் சந்தையில் போட்டியிலுள்ள OpenAI, ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு பாரிய நெருக்கடி ஏற்படும் என்றும் மீண்டும் கூகுள் தனக்கான தடத்தை பதிக்கும் என்றும கூறப்பட்டுள்ளது.

கூகுளின் புதிய ஜெமினி செயற்கை நுண்ணறிவு அமைப்பின் உட்கட்டமைப்பான Pathways, பல்வேறு தரவுத்தொகுப்புகளினை ஆய்வு செய்யும் வகையில் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

175 பில்லியனுக்கும் அதிகமான அளவுருக்கள் கொண்ட GPT-3 இன் அளவை விட அதிகமான அளவுருக்களை இது கொண்டுள்ளது.

இதுவரை உலகில் உருவாக்கப்பட்ட மொழி மாதிரிகளில் மிகப் பெரியதும் தனித்துவம் வாய்ந்ததுமாக ஜெமினி காணப்படுகிறது என்று கூகுள் தலைமை விஞ்ஞானி ஜெஃப்ரி டீன் தெரிவித்தார்.

ஜெமினியின் நினைவகத்தின் கொள்ளளவு அதிகமாக இருப்பதும் ஏராளமான தரவுத்தொகுதிகளை கொண்டிருப்பதால் துல்லியத்தன்மை இதில் அதிகம் இதனால் "அடுத்த தலைமுறை மல்டிமாடல் மொடல்களில்" ஒன்றாக ஜெமினி திகழும் என அவர் இதனை வர்ணித்துள்ளார்.  

ஜெமினி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது