கருடன் திரை விமர்சனம்



விடுதலை என்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு இனி நம் ரூட்டு கதையின் நாயகன் தான் என சூரி முடிவெடுத்து தொடர்ந்து தரமான படங்களை தேர்ந்தெடுக்க, அந்த லிஸ்டில் இந்த கருடன் இணைந்ததா, பார்ப்போம்.

சூரி சொக்கனாக தனக்கு சோறு போட்டு வளர்த்த நண்பன் கர்ணா(உன்னி முகுந்தன்) உடன் இருக்க, அவருக்கு ஒன்று என்றால் உயிரையே கொடுக்கும் அளவிற்கு இருக்கிறார்.

கர்ணாவின் உயிர் நண்பன் ஆதி(சசிகுமார்), இவர்களும் நல்ல நட்பில் இருக்க, ஆனால், இவர்களுக்கு என்று இருக்கும் கோவில் மூலம் ஒரு அரசியல்வாதிக்கு பல கோடி கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

இதனால் கர்ணாவிற்கு ஆசை காட்டி, ஆதியை கொல்லும் நிலைக்கு வர, இந்த உண்மையெல்லாம் தெரிந்த சொக்கன் யார் பக்கம் நின்றார், விஸ்வாசமா, நேர்மையா என்ற சொன்னனின் போராட்டமே மீதிக்கதை.

சூரி சொக்கனாக வாழ்ந்து இருக்கிறார், தன் நண்பன் கர்ணாவிற்கு ஒன்று என்றதும் முதல் ஆளாக யார் என்ன என்று தான் பார்க்காமல், முதல் அடியே தன் அடியாகவும், ஆனால் நேர்மை ஆதி பக்கம் இருப்பதால் விஸ்வாசமா, நியாயமா என்று மனதில் பல துரோகத்தை சுமந்துக்கொண்டு அவர் நிற்குக் இடம் சூரிய ஒரு நடிகனாக பல மடங்கு இந்த படம் உயர்த்தியுள்ளது. 

சசிகுமார் தனக்கென்று அளவெட்டு தைய்த்த சட்டை போல் நண்பன், பாசம், நேர்மை, துரோகம் என கதாபாத்திரத்தில் நிமிர்ந்து நிற்கின்றார், உன்னி முகுந்தனுக்கு மிக முக்கிய தமிழ் படமாகவு இது அமையும்.

ஒரு அரசியல்வாதியின் ஆசை எத்தனை பேர் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது, நாயாக நன்றாக இருந்த என்னை மனிதனாக மாற்றிவிட்டீயேணே என்று சூரி கலங்கும் இடத்தில் படத்தை முடித்தது என துரை செந்தில்குமார் கெரியர் பெஸ்ட் படமாகவே அமைந்துள்ளது.

யுவனின் பின்னணி இசை படத்தில் மற்றொரு கதாநாயகனாகவே வர, அதிலும் இடைவேளை BGM எல்லாம் பட்டாசு வெடிக்கிறார்.

படத்தில் ஒரு சில காட்சிகளை நாமே இது தான் நடக்கும் என்று யூகிக்கும் இடங்கள் மட்டே கொஞ்சம் பின்னடைவு. வைலன்ஸ் அதிகம் என்றாலும் கதைக்கு தேவையே.


க்ளாப்ஸ்

நடிகர், நடிகைகளின் பங்களிப்பு.

சண்டைக்காட்சிகள், திரைக்கதை.

யுவனின் பின்னணி இசை.


பல்ப்ஸ்

இரண்டாம் பாதியில் இதுதான் நடக்கும் என தெரியும் சில காட்சிகள்.

மொத்தத்தில் நம் பார்வை இந்த கருடன் மேல் விழ வேண்டும்.