ஈஸ்டர் சதித்திட்டம் பிள்ளையானின் நிதியிலா..! உருவானது புதிய சர்ச்சை

இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) எதிர்க்கட்சி உறுப்பினர் என்று நினைத்துக்கொண்டு மகிந்தானந்த அளுத்கமகே கருத்துரைக்கிறார். பிள்ளையானின் ஊடக செயலாளராகவே அன்ஷிப் அசாத் மௌலானா செயற்பட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (06) இடம்பெற்ற அமர்வின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், "சனல் -04 காணொளியில் தகவல்களை வெளியிட்ட அசாத் மௌலானாவின் வங்கி வைப்பு, நிதி இருப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றினார்.

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்) ஊடக செயலாளராக அசாத் மௌலானா செயற்பட்டார். அத்துடன் பிள்ளையானின் நிதி முகாமைத்துவத்துக்கு பொறுப்பாளராகவும் செயற்பட்டார்.

இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எதிர்க்கட்சி உறுப்பினர் என்று நினைத்துக்கொண்டு மகிந்தானந்த அளுத்கமகே கருத்துரைக்கிறார். நிதி முறைகேடு இடம்பெற்றிருந்தால் நிதி குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடளித்து விசாரணை செய்யுங்கள்" என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே, அன்ஷிப் அசாத் மெளலானாவின் தனியார் வங்கி சேமிப்பு வைப்பு தொடர்பில் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அன்ஷிப் அசாத் மௌலானாவின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் நிதி என்று  குறிப்பிட முடியாது. ஆகவே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது என பதிலளித்தார்.