செய்திதாள்களில் மடித்து தரப்படும் உணவுகளால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?


FSSAI தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜி கமலா வர்தன ராவ், உணவுப் பொருட்களை மடிக்க செய்தித்தாள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

செய்தி தாள் அச்சடிக்க பயன்படும் மை மனித உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அதில் பல்வேறு ரசாயனப் பொருட்கள் உள்ளன என்றும் ஏற்கனவே FSSAI அறிவுறுத்தியிருந்தது.

அந்த அச்சு மை, உணவை மாசுபடுத்தும் என்றும் உட்கொள்ளும் போது உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் கமலா வர்தன ராவ் எச்சரித்துள்ளார்.

மையில் ஈயம் மற்றும் கன உலோகங்கள் போன்ற இரசாயனங்கள் இருப்பதால், அவை செய்தித்தாளில் சுற்றப்பட்ட உணவுகள் மூலம் மனித உடலுக்குள் சென்று விடும்.

மேலும், உணவுப் பொருட்கள் மடிக்க பயன்படுத்தப்படும் செய்தித்தாள்கள் அடிக்கடி பல்வேறு சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.

இதனால் அவை பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பிற நோய்க்கிருமிகளால் மாசுபடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.இது உணவில் பரவும் நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் FSSAI எச்சரித்துள்ளது.

எனவே நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்கள் உண்ணக்கூடிய பொருட்களை வழங்க செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

வடை, சமோசா அல்லது பக்கோடா போன்ற வறுத்த உணவுகளிலிருந்து அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு செய்தித்தாள்களைப் பயன்படுத்தவும் கூடாது.

உணவுப் பொருட்களை மடிப்பதற்கு செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து, பாதுகாப்பான மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.