கொழும்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கலங்கல் : மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை


கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு கலங்கலான நீர் கிடைப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் காரணமாக கலட்டுவா நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான நீர் விநியோக பாதையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த நிலமை காரணமாக குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று (03) தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில், பல பிரதேசங்களுக்கு இன்று காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்தோடு, கலகெதர, பாதுக்க, கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பலன்வத்த, மத்தேகொட, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் பெப்பிலியான ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் கிடைக்கும் என அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளியேறிய பிரதான நீர் குழாயின் பணிகள் விரைவில் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

--