பிரதமர் மோடியை நேரில் சந்திக்க தயாராகும் தமிழர் தரப்பு : சி.வி.விக்னேஸ்வரன் தகவல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரும் கடிதம் மற்றும் வடக்கு, கிழக்கில் காணப்படுகின்ற சமகால நிலைமைகளை மையப்படுத்திய இராஜதந்திரிகளுக்கான கடிதம் ஆகியன இறுதியாகியுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமரை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக சந்தித்து விடயங்களை தெளிவுபடுத்த உள்ளதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய ரி.சரவணராஜா வெளியேறிய விவகாரம்.

அத்துடன் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான தனித்தனியான கடிதங்களும் இறுதியாகியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பங்களை இடுவதற்கு கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டதாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் கூறியுள்ளார்.

அதற்கமைவாக குறித்த கடிதங்களில் கட்சித் தலைவர்கள் கையொப்பங்களை இட்டு அந்தப் பணி ஒரு சில நாட்களில் பூர்த்தியாகும் என எதிர்பார்ப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.