தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் ஊர்திப் பவனி - இரண்டாம் நாள் பயணம் ஆரம்பம்!

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை - தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையிலான ஊர்திப் பவனி இன்றையதினம் தனது இரண்டாம் நாள் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

வவுனியாவில் ஆரம்பமாகியுள்ள குறித்த ஊர்திப் பவனிக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

முல்லைத்தீவில் இருந்து நேற்றையதினம் ஆரம்பாகிய ஊர்திப் பவனியானது நேற்றிரவு வவுனியாவை வந்தடைந்தது.

இன்றையதினம் (13.05.2023) காலை வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இரண்டாம் நாள் பயணம் ஆரம்பமாகியிருந்ததுடன், மக்கள் அஞ்சலியும் செலுத்தியிருந்தனர்.

அதன் பின்னர் குறித்த ஊர்திப்பவனியானது வவுனியா நகரை வலம்வந்ததுடன், மன்னார் நோக்கி பயணத்தை தொடர்ந்தது.