இரவோடு இரவாக புத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு - திருகோணமலை குச்சவெளியில் பதற்றம்!

 

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் பகுதியில் இரவோடு இரவாக புத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.

குச்சவெளி - இலந்தைக்குளம் 5ஆம் கட்டைப்பகுதியில் கடந்த (25) இரவில் இருந்து குச்சவெளி விகாரையான பிச்சமல் புரான ரஜமகா விகாரையினுடைய விகாராதிபதியின் தலைமையில் புத்த விகாரை அமைப்பதற்காக பொது மக்களுக்கு சொந்தமான காணி துப்பரவு செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வயலுக்கு சென்ற மக்களால் குறித்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை அவதானிக்கப்பட்டு மக்களுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து நேற்று (26) குச்சவெளி பிரதேச செயலாளரின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த வாகனங்கள் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இலந்தைக்குளம் கிராமத்தில் 1970ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே காலாகாலமாக வாழ்ந்து வந்த 85 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் யுத்தத்தின் காரணமாக 1990 ஆம் ஆண்டு மற்றும் அதனை அண்மித்த காலப்பகுதிகளில்  இடம்பெயர்ந்திருந்ததாகவும், அப்பகுதியில் மீள குடியமர்வதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நீண்டகாலமாக முன்வைத்துவருவதாகவும் இந்நிலையில் தற்போது அப்பகுதி ஆக்கிரமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.