மெக்சிகோவின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவாகி கிளாடியா ஷீன்பாம் வரலாற்று சாதனை



மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயரும் ஆளும் மொரேனா கட்சியின் வேட்பாளருமான கிளாடியா ஷீன்பாம், நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆணாதிக்க கலாசாரத்திற்கு பெயர் பெற்ற ஒரு நாட்டில் 61 வயதான வயதான கிளாடியா ஷீன்பாமின் வெற்றியானது ஒரு வரலாற்று சாதனையாக பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மெக்சிகோவில் நேற்று முன்தினம் நடைபெற்றத் தேர்தலில் கிளாடியா 58 முதல் 60 வீதம் வரையான வாக்குகளைப் பெற்றுள்ளதாக அந்நாட்டு  தேர்தல் ஆணையகம் அறிவித்திருந்தது.

இதன்படி, தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 8 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.

தேர்தல் முடிவுகளை நீதிமன்றம் உறுதிசெய்யும் நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கிளாடியா ஜனாதிபதியாக பதவியேற்பார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிளாடியா ஷீன்பாம் இயற்பியல் மற்றும் ஆற்றல் பொறியியலில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றவராவார்.

இந்த நிலையில், மெக்சிகோவின் 200 வருடகால வரலாற்றில் முதன் முறையாக பெண் ஜனாதிபதியாக தாம் மாறுவேன் எனவும், இது தமக்கு மாத்திரமல்ல அனைத்து பெண்களுக்குமான வெற்றி எனவும் கிளாடியா தமது உரையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தம்முடன் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இருவர் தமக்கு வாழ்த்து கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது